Friday, November 15, 2013

வேதனை அளிக்கும் வரிவிதிப்பு; வேடிக்கை பார்க்கும் அரசு

நமது நாட்டில் அனைத்து வளஙகளும் நிறைந்திருந்தாலும், நம்மை ஆளும் அரசுகள் சரியாக இல்லாததால் மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து ஏழைகளாகவே உள்ளனர்; மற்றொரு பிரிவினர் தொடர்ந்து கொழுத்த பணக்காரர்களாக உலா வருகிறார்கள். நாடடின் இந்த அவல நிலை குறித்து நமது வாசகர் அனுப்பிய இ-மெயிலை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். நாட்டின் இந்த அவல நிலைகுறித்தும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் வாசகர்ளிடமிருந்து கருத்துக்களாக எதிர்பார்க்கிறோம். வெறுமனே அரசுகளையும் அரசியல்வாதிகளையும் சாடுவதாக இல்லாமல், ஆக்கபூர்வமான விவாத மேடையாக இப்பகுதி அமைய வாசகர்களின் ஒத்துழைப்பை நாடுகிறோம்.
களக்காட்டிலிருந்து தினமலர் வாசகர் இந்தியன் அனுப்பிய இ மெயிலில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் பணம் சம்பாதிப்பவர்களுக்கு வரி விதிப்பது உண்டு.அதே போல நம் நாட்டிலும் வரி விதிக்கிறார்கள்.பலவித வரிகள் இருந்தாலும் வருமான வரியே பிரதானமானது. இருந்தாலும் இந்த வரியானது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களிடம் மட்டுமே கறராக வசூலிக்கப்படுகிறது. பொன்முட்டையிடும் இந்த அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை ஒரேடியாக அமுக்கி கொல்வது போல ஒவ்வொரு முறையும் கூடுதல் வரியும் அவர்களுக்கே விதிக்கப்படுகிறது.
சேவை வரி:
தற்போது கூடுதலாக சேவை வரியும் விதிக்கப்படுகிறது. இந்த சேவை வரி விதிப்பில் சினிமா கலைஞர்கள் சேர்த்தி கிடையாது காரணம் அவர்கள் செய்யும் கலைத்தொண்டு மூலம் பலவித குடும்பங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருவதாலோ என்று எண்ணி விடாதீர்கள். யாராவது ஒருவர் நெஞ்சில் கைவைத்து இந்த சினிமா கலைஞரால் நான் உயர்ந்தேன் என்று சொல்லட்டும், சொல்லமாட்டார்கள். சொல்லும்படியாக எந்த சினிமாவும் இல்லை எந்த சினிமா கலைஞரும் இல்லை. இதே போல சினிமா தொழிலின் மூலம் மக்களுக்கு அரிய சேவை செய்து நடைபாதைகளிலும், பூங்காக்களிலும் படுத்து உறங்கும் சினிமா கலைஞர்களுக்கு சேவைவரி கிடையாது. ஒருவேளை உதய"நிதி’ ஸ்டாலின், தயா"நிதி’ அழகிரி போன்ற தமது பேரன்கள் "பேரில்’ மட்டும்தான் "நிதி’வைத்திருக்கிறார்கள் ஆகவே அவர்களுக்கு எல்லாம் வரி போடவேண்டாம் என்று தன்னை சந்திக்க வந்த நிதி அமைச்சசரிடம் தாத்தா கருணா"நிதி’ வேண்டுகோள் விட்டுருப்பார் இல்லாவிட்டால் எதற்கும் குரல் கொடுக்காத ரஜினி இதற்கு குரல் கொடுத்தாரே என்பதால் இருக்காலாம்.
சேவை வரி வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு ரஜினிகாந்த் இருக்கிறார் இந்த அப்பாவி ஊழியர்களுக்கு யார் இருக்கிறார்கள். நாட்டில் முறையாக வரிகட்டும் 6 சதவீதம் பேர்கள் அவர்கள்தான். மீதம் 94 சதவீதம் பேர் வரியா அப்படின்னா? என்று கேட்பவர்களே அதிகம். அதற்காக அவர்களை கஷ்ட ஜீவனம் செய்பவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள், மாதம் ஒன்றரை லட்சத்திற்கு குறைவில்லாமல் சம்பாதிக்கும் கையேந்திபவன் வைத்திருப்பவராக இருப்பார் அல்லது பெட்டிக்கடை சைசில் நகைக்கடை வைத்திருப்பவராக இருப்பார். அவர்களிடம் போய் யார் கேட்பது. பாவம் அவர்கள் மஞ்சள் வண்ண ரேஷன் கார்டில் ஓரு ரூபாய் அரிசி வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்களாக்கும்.
மாட்டுவது யார்?:
மாட்டியது எல்லாம் முறையாக வரிகட்டும் இந்த ஆறு சதவீதம் பேர்தான்.வருடத்திற்கு முப்பாதாயிரம் ரூபாய் கட்டிவிட்டு கூடுதலாகிப் போன முன்னூறு ரூபாயை கட்டாமல் விட்டீர்கள் என்றால் செத்தீர்கள். அதற்காக முழு பக்க நோட்டீஸ் விட்டு, நீ நாட்டின் பொருளாதாரத்தை சாய்த்து விட்டாய் உன்னால்தான் பாலம் கட்டும் வேலைகள் தடைப்பட்டு கிடக்கிறது, அணைகள் கட்டும் பணிகள் முடங்கிகிடக்கிறது இப்படி நாட்டின் வளர்ச்சியை கெடுத்த உங்களுக்கு ஏன் அதிகபட்ச அபராதம் போடக்கூடாது என்று விளக்கம் கொடு இல்லையேல் உன்மீது சகல நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்படும் என்பார்கள்.
அண்டா குண்டாவை விற்றாவது அபாரதத்துடன் வரி கட்டுவதுதான் உத்தமம், அதைவிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என எந்த அரசியல்வாதியையாவது அணுகிவிடாதீர்கள். அவர்கள் எல்லாம் பூரண வரி விலக்கு பெற்றவர்கள்.ஏன் வரிவிலக்கு என்றால் காந்தி, நேரு வழியில் நின்று நாட்டின் வளர்ச்சிக்காக அல்லும், பகலும் உதிரத்தை வியர்வையாக்கி உழைத்துக்கொண்டு இருப்பவர்கள் அவர்கள் மட்டுமே.இதனால் இந்த மனித புனிதர்களுக்கு வாங்கக்கூடிய குறைந்த பட்ச சம்பளமான 80,000 ஆயிரத்திற்கு எந்த வரியும் கிடையாது.
சரி நியாயம் கேட்டு வழக்கு போடலாமா என யோசிக்காதீர்கள் காரணம் ஆடிட்டர் முதல் டாக்டர் வரை அவர்கள் செய்வது தொழில் ஆனால் வழக்கறிஞர்கள் செய்வது தொழில் அல்ல தொண்டு என்பதை நிதி அமைச்சர் உணர்ந்திருக்கிறார். எப்படி உணர்ந்தார் என்றால் அவரது துணைவியார் தொடங்கி மற்றும் அவர்தம் குடும்பத்தார் வரை வழக்கறிஞர்களே.ஆகவே வழக்கறிஞர்களுக்கும் சேவை வரி கிடையாது.
நீங்கள் சொல்வதை பார்த்தால் இந்த 6 சதவீதத்திற்காரர்கள்தான் கடைசிவரை அவுட்டா?என்றால் சந்தேகமில்லாமல் என்றுதான் சொல்லவேண்டியுள்ளது.

No comments:

Post a Comment