Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Tuesday, August 5, 2014

பணம் கொட்டும் தொழில்கள்- கற்றாழை சாகுபடி!


கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருத்துவச் செடி. அழகுசாதன, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. எனவே, இந்தத் திட்ட அறிக்கையில் கற்றாழை சாகுபடி மற்றும் அதிலிருந்து ஜெல் பிரித்து எடுப்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, சொந்த நிலம் உள்ள விவசாயிகள் மேற் கொள்ள ஏதுவான தொழில் என்றாலும், குத்தகை நிலம் மூலமும் இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியும்.
வணிக ரீதியாக பயிரிட்டால் நல்ல வருமானம் நிச்சயம் என்றாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதால் கற்றாழை சாகுபடி குறித்து யோசிப்பதில்லை. வேளாண்மைத் துறை வழிகாட்டுதல்கள் மற்றும் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பவர்களுடன் கூட்டுவைத்துக் கொள்ளும்போது நல்ல வருமானம் கிடைக்கும் என்பது உண்மை.
கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்தின் ஈரத் தன்மையைப் பாதுகாத்து சருமத்துக்கு கூடுதல் பொலிவையும் தருகிறது என்பதால் இதன் ஜெல்லை ஷேவ் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. தவிர, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக் காயங்கள் ஆகியவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
ரகங்கள்!
கற்றாழையில் குர்குவா, சாகோட்ரின், கேப் என மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் முதல் இரண்டு வகைகள் பார்பலோயின் (Barbaloin) மற்றும் அலோ எமோடின் ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றி லிருந்து வலி நிவாரணி மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. கேப் கற்றாழை கால்நடை மருத்துவத்துக்குப் பயன்படுகிறது.
மண் மற்றும் தட்பவெப்பநிலை!
வறட்சியான தட்பவெப்பத்தில் அதாவது 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளரும். எனினும் 25 – 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளிலும் பயிர் செய்யலாம். தமிழ்நாட்டில் ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்வதற்கு ஏற்றது. தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும், எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையைச் சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
விதையும் விதைப்பும்!
தாய்ச் செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து வாங்க வேண்டும். இந்தக் கன்றுகள் அனைத்தும் ஒரே அளவில் இருந்தால்தான் செடிகள் சீராக வளர்ந்து ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். பக்கக் கன்றுகளை வாங்கிவந்து அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடம் நனைத்தபிறகு நடவு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செடி அழுகல் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
கற்றாழையைத் தனிப் பயிராக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும். வளர்ந்த செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்து இருக்கும் என்பதால் காய் மற்றும் விதைகள் வராது. இதனால் கற்றாழையைப் பக்கக் கன்றுகள் மூலமாகத்தான் பயிர்ப்பெருக்கம் செய்ய வேண்டும்.
சாகுபடி பருவம்!
வருடத்துக்கு இரண்டு பருவங்களில், அதாவது ஜூன் – ஜூலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. இலைகள் முதிர்ச்சி பெறும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். அப்போதுதான் இலையி லிருந்து தரமான ஜெல் கிடைக்கும். இதற்காக செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. என்றாலும், கூடுதல் நிலம் உள்ளவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஓர் அறுவடை எடுப்பதுபோல சுழற்சி முறையிலும் மேற்கொள்ளலாம்.
நிலம் தயாரித்தல்!
நிலத்தை இரண்டுமுறை உழவேண்டும். ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, நிலத்தைச் சமன் செய்து சிறிய சிறிய பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். செடிகள் வாளிப் பாக வளர்வதற்கு ஏற்ப ஒவ்வொரு செடிக்கும் மூன்று அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு!
வளமான நிலம் எனில் தொழு உரம் மட்டும் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து உரம் கொடுக்க வேண்டும். இதனால் செடிகள் வாளிப்பாக வளர்வதுடன் அதிக ஜெல் கொண்ட இலைகள் கிடைக்கும்.
கற்றாழையை மானாவாரிப் பயிராக வும் பயிர் செய்யலாம். அதன் மொத்த பயிர் காலத்தில் ஐந்து முறை நீர்த் தேவையைக் கவனித்துக் கொண்டால் போதும். கற்றாழை செடியில் அதிகப் பூச்சிநோய் தோன்றுவதில்லை. நீர் தேங்கும் நிலமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே, நன்கு வடிகால் வசதி வேண்டும்.
மகசூல்!
ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும். இலையில் 80-90% நீர் உள்ளதால் விரைவாக வாடிவிட வாய்ப்புள்ளது. இதனால் அறுவடை செய்த உடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து ஜெல்லைப் பிரித்தெடுக்க வேண்டும்.
அதாவது, செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்த ஆறு மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்த எடுத்துச் செல்ல வேண்டும். நடவு நட்ட காலத்திலிருந்து 7-8 மாதங்களில் மகசூல் எடுக்கலாம்.
செலவுகள் (ரூ)
நிலம் உழுதல் : 2,500
உரம் : 15,000
கற்றாழை கன்று : 70,000
(ஒரு கன்று ரூ.7)
நடவுக் கூலி : 10,000
பராமரிப்பு : 20,000
அறுவடை கூலி : 10,000
இதர செலவுகள் : 10,000
மொத்த செலவுகள் : 1,37,500
விற்பனை வரவு!
செடிகளை அறுவடை செய்து அப்படியே விற்பனை செய்யும்பட்சத்தில் விற்பனை வருமானம் குறைவாகத்தான் கிடைக்கும். அதாவது, அறுவடை செய்த கற்றாழை செடிக்கு கிலோ ரூ.15 – ரூ.20 வரைதான் கிடைக்கும். அதே சமயத்தில் ஜெல் பிரித்து விற்பனை செய்கிறபோது, ஒரு கிலோ ஜெல்லுக்கு ரூ.75 – 100 வரை கிடைக்கும்.
ஜெல் எடுக்கத் திட்டமிடுகிறபோது 25% வரை கழிவு போகும். ஒரு கிலோ கற்றாழை ரூ.18 என சராசரியாக வைத்துக்கொண்டாலும் நமது உற்பத்தி 15 டன் என்கிறபோது, மொத்த விற்பனை வரவு ரூ.2,70,000. (15000
18=2,70,000) ஜெல் எடுத்து விற்பனை செய்வதற்கேற்ப ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறபோது விற்பனை வரவு கூடுதலாகும்.
லாபம்!
மொத்த விற்பனை : ரூ.2,70,000
மொத்த செலவு : ரூ. 1,37,500
லாபம் : ரூ.1,32,500
(இந்த வருமானம் 8 மாதங்களுக்கு. இதுவே கூடுதல் நிலம் வைத்து சுழற்சிமுறையில் செய்தால், ஒவ்வொரு மகசூலுக்கும் இந்த வருமானம் பார்க்க முடியும். இந்தத் தொழிலுக்கு மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் மூலம் மானியம் கிடைக்கும். தவிர விவசாயக் கூட்டுறவு சங்கம் மூலமாக மாநில அரசின் விவசாயக் கடன்கள் பெற முடியும்.

No comments: