Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Tuesday, August 5, 2014

தலைசுற்றல், மயக்கமா? மூளை பாதிப்பாக இருக்கலாம்!


பல்வேறு நோய்களால் மூளை பாதிக்கப்படும்போது, நம் உடலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. இதனால் வேலை செய்ய முடியாது. குடும்பத்தில் வறுமை, நிதி நெருக்கடி, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்று சமூக பொருளாதார பிரச்னைகள் எழுகின்றன
தலைசுற்றல், மயக்கம் ஆகியவை, மூளை சார்ந்த பாதிப்பாக இருக்கலாம். பக்கவாதம் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம். காலம் தாழ்த்திச் சென்றால் சிக்கலாகிவிடும். புகை, மது தவிர்த்தல், தினமும் பழம், காய்கறி சாப்பிடுதால் மூளை பாதிப்பு வராமல் தப்பலாம்.
- இப்படி சொல்கிறார், நரம்பியல் துறை நிபுணர் டாக்டர் கே.பானு. இப்படி எச்சரித்தவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் பதில்களும்:
1. மூளையின் செயல்பாட்டால் என்ன நடக்கிறது?
மொழித்திறன், செயல்திறன், புலனறிவு, நினைவாற்றல் ஆகியவற்றுக்கு, மூளையின் இயக்கமே காரணம். விரிவாக சொல்வது என்றால், அன்றாட அடிப்படை திறமை சார்ந்த மற்றும் ஓய்வு சார்ந்த வேலைகளை, சரியாக, சீராக, முறையாக செய்தல்; அறிதல் மற்றும் புரிதல் திறனுடன் சூழ்நிலைக்கேற்ப செயல்படுதல்; உடல் மற்றும் புலன் ஆகியவை முழுமையாக இயங்க, மூளையின் செயல்பாடு முக்கியம்.
2. பக்கவாதம் என்றால் என்ன? அதற்கான காரணம் என்ன?
உடலில் ஆக்சிஜன் மற்றும் குளூக்கோஸ் அளவு குறையும்போது, மூளையில் உள்ள செல்கள் இறக்க நேரிடுவது; மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவது ஆகியவை, பக்கவாதம் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. இறப்புக்கான காரணமான நோய்களில், இது, மூன்றாவது இடத்தில் உள்ளது. 6 நொடிக்கு ஒருவர் என, ஆண்டுக்கு, 1.5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில், 15 முதல் 30 சதவீதம் பேர், படுத்த படுக்கையாகி விடுவர். இந்த நோய் பாதித்தால் உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புச் சத்து அதிகமாகி உடல் எடை கூடுதல், குடிப்பழக்கம், மன அழுத்தம் பேன்றவை, இதற்கு காரணம்.
3. மூளையை தாக்கும் நோய்கள் என்ன?
தலைவலி, தலைசுற்று, மயக்கம், வலிப்பு நோய், பக்கவாதம், மூளை நரம்பு ஒவ்வாமை, அங்க அசைவு நோய்கள், ஞாபக மறதிநோய், தொற்று நோய்கள் மற்றும் மரபணு குறைபாடுகள்.
4. மறதி நோய் என்றால் என்ன? எப்படி தடுப்பது?
மறதி நோய் என்பது, 60 வயதிற்கு மேலான முதியோரை தாக்கும். ஞாபக சக்தி, கொஞ்சம் கொஞ்சமாக குறையும்; சரியான புரிதல் திறன் இருக்காது. இதய நோய் தாக்குதலுக்கு காரணமான, ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்பு, கொழுப்புச் சத்து, அடிபட்டு தலையில் காயம் ஏற்படுதலாலும், இந்த நோய் வருகிறது. நம் மூளையின் திறனை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். அதாவது படித்தல், அதிகமாக அறிதல் திறனை வளர்ப்பது, மறதி நோயைத் தடுக்க உதவும்.
5. தூக்கமின்மை மூளை சார்ந்த பாதிப்பு தானே? இதனால் வேறு என்ன பாதிப்புகள் வரும்?
எந்த சந்தேகமும் வேண்டாம்; தூக்கமின்மை மூளை சார்ந்த நோய் தான். ஐந்து பேரில் ஒருவர், தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்கா விட்டால் எரிச்சல், சரியான அளவு திறனை வெளிப்படுத்தாமையுடன், வேலைத் திறன் குறைவதோடு, விபத்துகளுக்கும்
வழிவகுக்கும். தூக்கமின்மையால், இதய நோய், பக்கவாதம் போன்ற வியாதிகள் வரவும், வாய்ப்புகள் அதிகம். தூங்க முடியாத பட்சத்தில், காபி, டீ, மது பானங்களை, அறவே தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு, நான்கு மணி நேரத்திற்கு முன், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் இருப்பது அவசியம். படுக்கை அறையில், ‘டிவி’ பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தினமும், ஆறு மணி முதல் எட்டு மணி வரை கட்டாயம் தூங்க வேண்டும்.
6. போதையேற்றினால் மூளை சுறுசுறுப்பாக இருப்பதாக, ‘குடி’மகன்கள் கூறுகின்றனரே?
முற்றிலும் தவறான தகவல். 12 முதல் 30 வயது வரை உள்ளோர், மது பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்த வயதில் ஏற்படும் பழக்கம், 65 வயதிற்கு மேல் தான் குறைகிறது. கல்லூரி மாணவர்கள், மதுவை ஒரு நாகரிக பானமாக கருதி, குடிக்கின்றனர். மது மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையற்ற மனக் குழப்பத்தை உருவாக்கும். வேலைத் திறன் மற்றும் படிப்பாற்றலைக் குறைக்கும்.
7. விபத்துகளில் சிக்கி தலையில் அடிபட்டால், பிழைப்பது கடினமா?
ஆண்டுதோறும், 20 லட்சம் மக்கள், விபத்துகளில் சிக்குகின்றனர். அதில், 10 லட்சம் பேர் இறக்கின்றனர். மது அருந்தி விபத்துக்குள்ளானோர், 20 சதவீதம் பேர். 10 நிமிடத்திற்கு ஒரு நபர், மூளைக் காயத்தால் இறக்கிறார். விபத்துகளில் சிக்கி, தலையில் பலத்த அடி ஏற்பட்டால், மூளை பெரிதாக பாதிக்கப்படுவதே, இறப்புக்கு காரணம்.தலைக்கவசம் அணிவது, மது குடித்து போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, சாலை விதிகளை சரியாக கடைபிடிப்பது, அதிவேக பயணம் செய்வதை கட்டுப்படுத்துவது ஆகியவை மூலம், இந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
8. மூளையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
பல்வேறு நோய்களால் மூளை பாதிக்கப்படும்போது, நமது உடலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. அப்படியானால் வேலை செய்ய முடியாது. குடும்பத்தில் வறுமை, நிதி நெருக்கடி, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்று சமூக பொருளாதார பிரச்னைகள் எழுகின்றன. எனவே, நிரந்த ஊனத்தை தவிர்க்க, முறையான மூளை பாதுகாப்பு அவசியம்.
9. மூளையை பாதுகாப்பது எப்படி?
அன்றாட உணவில், காய்கறி, பழங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல்; அன்றாட உடற்பயிற்சி செய்தல்; மன அழுத்தம் தவிர்த்தல்; புகை, புகையிலை, போதை மருந்து, மது வகைகளை தவிர்த்தல் ஆகியவை, மூளை பாதிப்பு வராமல் தடுக்கும்.
தலை சுற்றல், மயக்கம் வந்தால், முறையான மருத்துவ ஆலோசனை பெறுதலும், மூளையை பாதுகாக்க உதவும்.

No comments: