Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Sunday, August 24, 2014

காலை உணவு தவிர்த்தால் சர்க்கரை நோய் வரும்


அடிக்கடி வாய்ப்புண் வருவதை தடுப்பது எப்படி?
‘சாலையோர கடைகளில் சாப்பிடுவோருக்கு, உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. பழைய உணவு சாப்பிடுவதாலும், இந்த பாதிப்பு வரும். காலை உணவை தவிர்த்தால் சர்க்கரை நோய் வரும்’ என, டாக்டர்கள் எச்சரித்தனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, குடல், இரைப்பை பிரிவு சார்பில், ‘உணவு பழக்கமும், உடல் ஆரோக்கியமும்’ என்ற தலைப்பில், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. குடல் இரைப்பை சிகிச்சைத் துறைத் தலைவர் சந்திரமோகன், சண்முகம், ரகுநந்தன், நாராயணசாமி, பழனிச்சாமி மற்றும் மீனாட்சி உள்ளிட்ட நிபுணர் குழு, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தது.
பொதுமக்களின் கேள்விகளும், நிபுணர்களின் பதில்களும்:
1. உணவுக்குழாய் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?
குடல், இரைப்பை சிகிச்சை பிரிவு சார்பில், புற்றுநோய் பாதித்தோரிடம் ஒரு ஆய்வு நடத்தினோம். அதில், தெருவோர கடைகளில் உணவு சாப்பிடுவதால், பெருமளவு உணவுக்குழாயில் புற்றுநோய் வந்துள்ளது. எண்ணெய் சுத்தமாக இருப்பதில்லை. பாமாயில் போன்ற குறைந்த விலை எண்ணெய் மட்டுமின்றி, ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்துவது இதற்கு காரணம் என, தெரிய வந்தது.
2. வேறு காரணம் உண்டா? பழைய சாதம் சாப்பிட்டாலும் ஆபத்து என்கின்றனரே?
உண்மை தான். புகை பழக்கத்தால் புற்றுநோய் வரும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஊறுகாய், வற்றல், மிளகாய் பொடி சாதம் அதிகம் சாப்பிடுவோருக்கும் பாதிப்பு வருகிறது. இவர்கள் காய்கறி, கீரை, பழங்களை அதிகம் சாப்பிடுவதில்லை. சுடச்சுட டீ, காபி சாப்பிடுதல், புளிக்குழம்பு, பழைய சாதம் சாப்பிடுவதாலும் புற்றுநோய் வரும். புளித்த பழைய சாதத்தை சாப்பிட அதிக உப்பு, ஊறுகாய் எடுத்துக் கொள்வதே இதற்கு காரணம். பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
3. சர்க்கரை நோயாளிகள், சர்க்கரைக்கு பதிலாக ‘சுகர் பிரீ’ பயன்படுத்துவது சரியா? அதனாலும் பாதிப்பு வருமா?
நீரிழிவு நோயாளிகள், சர்க்கரைக்கு பதிலாக, ‘சுகர் பிரீ’ சேர்த்துக் கொள்ளலாம்; பெரிதாக பாதிப்பு வராது. ஆனால், ‘சுக்ரோஸ்’ உள்ள,
சுகர் பிரீ பவுடர்களை தேர்வு செய்வது நல்லது. மற்ற சுகர் பிரீக்கள், ஒவ்வொரு விதமா நோய் பாதிப்புள்ளோருக்கு, வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இரண்டு வாரத்திற்கு, டீ, காபியை சர்க்கரை இன்றி சாப்பிட பழகிவிட்டால், இயல்பாகிவிடும். அதன்பின் சர்க்கரை தேவைப்படாது. சிறு சர்க்கரை சேர்த்தாலே பாயசம் போல் இனிக்கும். இந்த நிலைக்கு சர்க்கரை நோயாளிகள் மாறுவதே நல்லது.
4. இன்று ‘ஸ்வீட்’ சாப்பிட்டு விட்டேன் என, அரை மாத்திரை கூடுதலாக போட்டுக் கொள்வது சரியா?
ஏதாவது ஒரு நாள் இப்படி, ‘ஸ்வீட்’ சாப்பிட நேர்ந்தால், அதற்கு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கூடுதலாக நடை பயிற்சி செய்யுங்கள். ஆனால், இதுவே பழக்கமாகி விடக்கூடாது. அதற்காக மாத்திரை எடுத்துக் கொள்வது சரியல்ல. இரவு நேரத்தில் அதிக இனிப்பு சாப்பிட்டு, அதற்காக, மாத்திரை எடுத்துக் கொண்டால், தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும். லோ சுகர் வந்து, ஒரு கட்டத்தில் கோமா நிலைக்கும் போகும் ஆபத்து உள்ளது. மிகவும் கவனம் தேவை.
5. 50 வயதுக்கு மேற்பட்டோர் அசைவ உணவு சாப்பிடலாமா?
அசைவ உணவில் நார் சத்து இல்லை; புரதச் சத்து மட்டுமே உள்ளது. முட்டை மஞ்சக்கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கருவாடு, பாயா போன்றவற்றை சாப்பிடக்கூடாது. முட்டை வெள்ளைக்கரு எடுத்துக் கொள்ளலாம். மீன் சாப்பிடுவது நல்லது. குழம்பு வைத்தோ, பொரியலாகவோ சாப்பிடலாம். அதற்காக பொரித்து சாப்பிடுவது கூடாது. இறாலும் எடுத்துக் கொள்ளலாம். அதை, 28 கிராமிற்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
6. சிலருக்கு ஈரல் குழம்பு, ரத்த பொரியல் சாப்பிடுமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனரே?
அனிமியா (ரத்த சோகை) நோய் பாதிப்பு உள்ளோருக்கு, இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதற்காக, ஈரல் குழம்பு, ஆட்டு ரத்த பொரியல் சாப்பிடச் சொல்வது வழக்கம். அதோடு, நெல்லிக்காயும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு அவ்வாறு எந்த அறிவுரையும் டாக்டர்கள் தருவதில்லை.
7. சாப்பாட்டில் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. எண்ணெய் சேர்ப்பது சரியா, எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?
எண்ணெயில் கொழுப்புச்சத்து அதிகம். ஒரு நபருக்கு மாதத்திற்கு, அரை லிட்டர் என்ற அளவில் எடுத்துக் கொள்ளலாம். அதை, 250 கிராம் நல்லெண்ணெய், 250 கிராம் மற்றொரு எண்ணெய் என, பயன்படுத்தலாம். இரண்டையும் கலந்து விடக்கூடாது. பாமாயில் கொழுப்புச் சத்து நிறைந்துள்ளதால், பயன்படுத்த வேண்டாம்.
8. ஓட்ஸ் தினமும் எடுத்துக் கொள்ளலாமா?; இதற்கு மாற்று என்ன பயன்படுத்தலாம்?
ஓட்சில் நிறைய சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் அவற்றை கஞ்சியாக குடிக்கக்கூடாது. இதை பவுடராக்கி, பிற மாவுடன் கலந்து பயன்படுத்தலாம். ஓட்சுக்கு நிகரானது என்று, ஏதும் சொல்ல முடியாது. இரவு நேரத்தில் வேண்டுமானால், சம்பா கோதுமை, கேழ்வரகு சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.
9. அடிக்கடி வாய்ப்புண் வருகிறது; மாதவிடாய்க்கு முன் இதுபோன்ற பாதிப்பு வருகிறது. என்ன செய்வது?
‘வைட்டமின் – டி’ குறைபாடு தான் இதற்கு காரணம். மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். வெடிப்பு வந்தால் நெய் தடவிக் கொள்வது நல்லது.
10. தொடர்ந்து இரவு நேர பணிக்கு செல்வோர், ‘பிரேக் பாஸ்ட்’ சாப்பிடுவதில்லை. இது சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனரே?
ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோர் தான் இந்த மாதிரி சிக்கலுக்கு ஆளாகின்றனர். ‘பேச்சுலர்’ ஆக உள்ள வாலிபர்களும், காலை உணவு எடுப்பதில்லை. இதுபோன்றோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வரும். தொடர்ந்து இரவு நேர பணிக்குச் செல்லாமல், ‘ஷிப்டு’களை மாற்றிக் கொள்வது நல்லது. காலை உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லதல்ல.
11. உணவுக்கிடையே எவ்வளவு இடைவெளி தேவை? நோய் பாதிப்பு வராமல் இருக்க என்ன வழி?
பொதுவாக, ஒரு முறை உணவு எடுத்த பின், அடுத்த உணவு சாப்பிட, இரண்டு மணி நேரமாவது இடைவெளி தேவை. மதிய உணவுக்கும், இரவு டிபனுக்கும் இடையே, ஐந்து மணி நேர இடைவெளி இருப்பது அவசியம். சரியான நேரத்தில் உணவு, உணவில், கீரை, காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுதல், சரியான தூக்கம், தேவையான உடற்பயிற்சியும் இருந்தால், நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

No comments: