Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Monday, August 10, 2015

சீஸன் பழங்கள்

 ‘பருவம் அறிந்து பயிர் செய்’ எனச் சொல்வார்கள். அதைப்போலவே, அந்தந்தப் பருவத்தில் விளையும் பழங்களைச் சாப்பிடுவதே சிறந்தது. காரணம், சீஸன் பழங்களில்தான் அந்தந்தப் பருவத்தில் மனிதர்களுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகள் உள்ளிட்ட இந்தப் பூமியின் அனைத்து ஜீவராசிகளின் வாழ்வும் இயற்கையுடன் பிணைந்திருப்பதைப்போலவே, மனிதர்களின் வாழ்க்கையும் பருவநிலையுடன் இணைந்திருக்கிறது. இயற்கையே செய்திருக்கும் இந்த ஏற்பாட்டை நாம் பின்பற்றுவதுதான், முறையான… சரியான வாழ்வுக்கான வழிமுறை. மாறாக, வருடம் முழுவதும் மாம்பழம் வேண்டும் என்றால், மாதக்கணக்கில் பதப்படுத்தப்பட்ட மாம்பழச் சாறும், கார்ஃபைடு கல் கொண்டு பழுக்கவைக்கப்பட்ட மாம்பழமும்தான் கிடைக்கும். இதே நிலைதான் மற்ற பழங்களுக்கும்.
பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, விட்டமின்கள், தாது உப்புகள், கனிமங்கள் உள்ளிட்ட அனைத்துச் சத்துக்களும் மனித உடல் வளர்ச்சிக்கு அவசியமானவை; பலவிதமான நோய்களை வராமலும், பரவாமலும் தடுக்கக்கூடியவை. பழங்களின் முழுச் சத்துக்களையும் பெறவேண்டுமானால், அவற்றைக் கழுவி, சுத்தப்படுத்தி, தோலுடன் சாப்பிட முடிந்த பழங்களை அப்படியே  சாப்பிட வேண்டும். ‘பழம்தானே’ எனக் கடித்து விழுங்காமல், நன்றாக மென்று கூழாக்கி, சிறிது, சிறிதாக விழுங்கும்போதுதான் பழத்தின் மணத்தையும் சுவையையும் முழுமையாக உணர முடியும். இப்படிச் செய்யும்போது பழத்தின் பெரும்பாலான சதைப்பற்று சத்தாக மாற்றப்பட்டு கழிவுகள் குறைகின்றன.
உண்பதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, கொட்டை இல்லாத பழ வகைகளை வாங்குகிறோம். இதுபோன்ற ரகங்களுக்கு, அதிக அளவு பூச்சிக்கொல்லிகளும் வேதி உரங்களும் கொட்டப்படுகின்றன. எனவே, கொட்டை இல்லாத பழங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். கொட்டை உள்ள பழங்களில், கொட்டையை நீக்கிவிட்டு உண்ண வேண்டும். கொட்டைகளின் மேல் ஓட்டுக்கும் உள்ளே இருக்கும் பருப்புக்கும் இடையில் சிறு சவ்வு இருக்கும். கொட்டையைப் பாதுகாக்கும் இந்தச் சவ்வையும் நீக்கிவிட வேண்டும்.
பழங்களை வாங்கும்போது, இயற்கையான அளவைவிட பெரியதாகவும் பளபளப்புடனும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. பழத்தின் தரம் என்பது, அதன் பளபளப்பில் இல்லை. சொல்லப்போனால் இயற்கையாக விளைந்த தரமான பழங்கள் ஒருபோதும் பளபளப்புடன் இருக்காது என்பதை மனதில் கொள்ளவேண்டும். பழத்தின் காம்பு பச்சையாகவோ, சற்று காய்ந்து இருந்தாலோ, அந்தப் பழம் பறிக்கப்பட்டு குறைந்த காலமே ஆகியிருப்பதாக யூகித்து அதை வாங்கலாம். பழங்களின் மீது அதிகமான கறுப்புப் புள்ளிகள், வெள்ளை நிறத் தூள் வகைகள், சாயம், பூஞ்சை போன்றவை தென்பட்டால் அதைத் தவிர்க்கலாம். அதைப்போலவே முடிந்தவரை பழங்களை, பழங்களாகவே சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாக உடலுக்குச் சென்று சேரும். மாறாக, பழத்தை நறுக்கி அதனுடன் சீனி, பால், ஐஸ், சுவையூட்டிகள், மணமூட்டிகள் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து ஜூஸாகக் குடிக்கும்போது, நார்ச்சத்தும் சத்துமிகுந்த கனிமங்களும் வடிகட்டப்பட்டுவிடுகின்றன. அதனால் தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டும் தேன் கலந்து ஜூஸ் பருகலாம்.
மிகுந்த சத்து நிறைந்ததாகக் கருதப்படும் ஆப்பிள், பெரும்பாலும் வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது. பறிக்கப்பட்டு மாதக்கணக்கில் பதப்படுத்திவைத்த பின்னரே அது கடைகளுக்கு வருகிறது. நீங்கள் உண்ணும்  ஆப்பிள், மரத்தில் இருந்து பறிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆனதாகக்கூட இருக்கலாம். இதனால் ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக, அதன் மீது மெழுகு தடவுகின்றனர். ஆப்பிளை லேசாக சுரண்டிப்பார்த்தாலே மெழுகு கையில் வரும். பெரும்பாலான மக்கள், தோலைச் சீவிவிட்டே பயன்படுத்துகிறார்கள். ஏதோ நம்மால் முடிந்து பாதுகாப்பு ஏற்பாடு. ஆனால், இப்படி மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.
வாதத்தைக் குறைக்கும் மாம்பழத்தை, ஆடி மாதத்துக்கு முன் சாப்பிடுவதே சிறந்தது. அப்போதுதான் உடல் சூடு குறையும்; வாய்ப்புண் நீங்கும். கோடையில் மட்டும் விளையும் வெள்ளரிப் பழம், உடலை சட்டெனக் குளிர்ச்சியாக்கும். இதை, கோடையில் சாப்பிடுவதே நல்லது. மாறாக தை மாதத்தில் சாப்பிட்டால், சீதோஷ்ணநிலை காரணமாக ஏற்கெனவே குளிராக இருக்கும் உடல்நிலையில் இன்னும் குளிர்ச்சியைச் சேர்த்துவிடும். துவர்ப்பு சுவை உள்ள நாவல்பழம், சர்க்கரையைக் கட்டுப்படுத்தி ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்; ஆஸ்துமாவைக் குறைக்கும். மாதுளம்பழத்தில் விட்டமின்-ஏ சத்து ஏராளமாக இருக்கிறது; உடலுக்குக் குளிர்ச்சியையும் தரக்கூடியது. அன்னாசிபழம், தோல் சுருக்கத்தைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை முறைப்படுத்துகிறது. மெலனின் (விமீறீணீஸீவீஸீ) எனும் நிறமிக் குறைபாட்டை நீக்கவும், மூளை செல்களின் வளர்ச்சியைச் சீராக்கவும் சப்போட்டா பழம் உதவுகிறது. தாய்ப்பாலிலும் கடல் உணவுகளிலும் உள்ள விட்டமின்-பி12, சப்போட்டாவில் இருக்கிறது.
பருவத்தில் கிடைக்கும் இலந்தைப்பழம், உடல் தசையை உறுதியாக்குகிறது. இலந்தைப் பழம் வாங்கும்போது, எண்ணெய் தடவாத பழமா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும். இதேபோல விளாம்பழம் நல்ல பசியை உண்டாக்கும். வில்வப்பழம் குளிர்ச்சியைத் தரும். உணவு உண்பதற்கு 45 நிமிடங்கள் முன்போ அல்லது உணவு உண்டு 1லு மணி நேரம் கழித்துதோ பழங்களைச் சாப்பிடுவது சிறந்தது. மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் ஆரோக்கியத்துக்கும் தினமும் வெவ்வேறு வகையான பழங்களை 200 கிராம் உண்ண வேண்டும். சுண்ணாம்புச் சத்துக்கு சீத்தாப்பழம், இரும்புச்சத்துக்குப் பேரீச்சை, விட்டமின்-சி   சத்துக்கு நெல்லி… எனக் கலவையாகச் சாப்பிட வேண்டும். பெரும்பாலான பழங்களில் இயற்கையாக உள்ள துத்தநாகச்சத்து, குழந்தைகளின் மூளை செல் வளர்ச்சி சீராக இருக்க உதவுகிறது. எனவே, குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அனைத்து வகையான பழங்களையும் கொடுத்துப் பழக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான ரகங்களில் விளையும் வாழைப்பழத்தில், ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு மருத்துவக் குணம்கொண்டது. முடிந்தவரை நாட்டு வாழைப் பழங்களை வாங்குவதே சிறந்தது. அவை கனிந்த பழங்களாக இருக்க வேண்டும். வாழைப்பழத்தின் காம்பும் மஞ்சள் நிறமாக இருந்தால், அது ரசாயனம் போட்டு பழுக்கவைக்கப்பட்டதாக இருக்கலாம். ஆரோக்கியம் என்பது, தானாக வருவது அல்ல; நம் முயற்சியில் நாமே உருவாக்கிக்கொள்வது. இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் சத்துக்கள் நிறைந்த பழங்களை, சரியாக… முறையாகச் சாப்பிடுவதன் மூலம் உடலை இன்னும் உறுதியாக்கலாம்; இன்னும் இலகுவாக்கலாம்!
Thank You

No comments: