Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Tuesday, January 21, 2014

அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து பாலிசிகள் ! இன்ஷூரன்ஸ்!!

பரபரப்பாக இயங்கும் உலகமிது. இதில் யாருக்கு எப்போது எப்படி பிரச்னை வரும் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை தலைகீழாக மாறிவிடும். அதாவது, உயிரிழப்பு அல்லது உடல்பாதிப்பினால் குடும்பத் தலைவர் மூலம் குடும்பத்திற்கு கிடைக்கும் வருமானம் தடைபடும். குடும்பத் தலைவர் ஏற்கெனவே கடன் வாங்கியிருந்தால் அதைத் திரும்பக் கட்டவேண்டிய கட்டாயம் அந்தக் குடும்பத்தினரின் மேல் விழுந்து, மேலும் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இப்படி ஒரே சமயத்தில் பணநெருக்கடியும், மனநெருக்கடியும் ஏற்பட்டு அந்தக் குடும்பத்தினரின் வாழ்க்கையே நரகமாக மாறிவிடும். எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைவது இன்ஷூரன்ஸ் ஒன்றாக மட்டுமே இருக்கும் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை.
எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்னென்ன? இவை எந்த வகையில் வாழ்க்கைக்கு உதவும் என்பது குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர் வி.சங்கர்.

லைஃப் இன்ஷூரன்ஸ்!
திருமணமானவர்கள் அவசியம் எடுக்கவேண்டிய பாலிசி இது. இதற்காக திருமணமாகாதவர்களுக்கு இந்த பாலிசி தேவையில்லை என்பதல்ல அர்த்தம். தனிநபரைச் சார்ந்து பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகள் இருந்தால் கட்டாயம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் டேர்ம் பாலிசி, முழு ஆயுள் பாலிசி, எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி, சைல்டு ப்ளான் பாலிசி என பலவகைகள் உள்ளன. இதில் டேர்ம் இன்ஷூரன்ஸ்தான், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் தரும் பாலிசியாக இருக்கும். இந்த டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டும்தான் இழப்பீடு கிடைக்கும். பாலிசி முடிவில் எந்த முதிர்வுத் தொகையும் பாலிசிதாரருக்குக் கிடைக்காது.

பொதுவாக, இந்த லைஃப் பாலிசியின் கவரேஜ் தொகையானது ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல் 10-லிருந்து 12 மடங்கு இருக்குமாறு எடுத்துக்கொள்வது நல்லது. உங்களது ஆண்டு வருமானம் சுமார் 4 லட்சம் ரூபாய் எனில், நீங்கள் குறைந்தது 40 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு பாலிசி எடுப்பது நல்லது.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை முடிந்தவரை இளம் வயதிலேயே எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், வயது அதிகமாக அதிகமாக உடல் பிரச்னைகள் அதிகமாகும். உடலில் பிரச்னை இருக்கும் சமயத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைப்பது கடினம்.

உதாரணத்துக்கு, இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் உங்கள் வாழ்க்கை அதிக ரிஸ்க் கொண்டதாக மாறிவிடும். அப்போது லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க நினைத்தால், அது கிடைக்காமலே போக வாய்ப்பு அதிகம். அப்படியே கிடைத்தாலும் பிரீமியம் மிக மிக அதிகமாக இருக்கும்.
எனவே, இளம்வயதில் ஆரோக்கியமாக இருக்கும்போதே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே புத்திசாலித்தனம். மேலும், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது விபத்துக் காப்பீட்டுடன் கூடிய பாலிசிகள் கிடைக்கின்றன. இதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில், விபத்தினால் மரணம் ஏற்படும்போது இரு மடங்காக கவரேஜ் தொகை கிடைக்கும்.
இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காகத்தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசியோடு, சேமிப்பு மற்றும் முதலீடு என்று உங்களை திசை திருப்புவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்தவகை பாலிசிகளில் ஆண்டுக்கு சுமார் 5-6 சதவிகிதம்தான் வருமானம் கிடைக்கவே வாய்ப்புண்டு. எனவே, முடிந்தவரை இந்த வகையான பாலிசிகளைத் தவிர்ப்பது நல்லது. 

கடனுக்கான இன்ஷூரன்ஸ்!
இன்றைய நிலையில் கடன் வாங்காமல் யாருமே இருக்க முடியாது. அடிப்படை தேவை களில் ஒன்றாக கடன் மாறிவிட்டது. வீடு, கார் போன்றவற்றை நாம் கடன் வாங்கித்தான் வாங்குகிறோம்.  இதில் வீட்டுக் கடன் என்பது நீண்ட கால கடனாக இருக்கும் என்பதால் மாதாமாதம் இ.எம்.ஐ. மூலம் கடனை திரும்பக் கட்டுவோம். இச்சூழ்நிலையில் எதிர்பாராத விபத்து, மரணம் ஏற்படும்போது குடும்பத்தினர் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். இதுபோன்ற சிக்கலில் இருந்து தப்பிக்க ஒருவர் கடனாக வாங்கியத் தொகைக்கு ஈடாக ஆயுள் காப்பீடு பாலிசியை எடுப்பது அவசியம்.
அதாவது, எதிர்பாராதவிதமாக கடன் வாங்கியவருக்கு மரணம் ஏற்பட்டால் அந்தக் கடன் சுமையிலிருந்து குடும்ப உறுப்பினர்கள் விடுபட முடியும். கடன் வாங்கியவர் மரணமடை யும் நிலையில், அப்போது நிலுவையில் உள்ள கடன் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வங்கிக்கு தந்துவிடும். கடன் தொகை குறைய குறைய கவரேஜும் குறைகிற மாதிரி பாலிசிகள் உள்ளன. இதில் பிரீமியம் குறைவாக இருக்கும். இந்த பாலிசி கல்விக் கடன், கார் கடன், வீட்டுக் கடன் என நீண்ட கால கடன்களுக்கு கிடைக்கும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
பல நாட்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சேமிப்பு அனைத்தும் ஒரு வியாதி வந்தாலே கரைந்துவிடும். விபத்து ஏற்பட்டு அதனால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவது, திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவு போன்ற சமயங்களில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி அவசியம்.

இந்த இன்ஷூரன்ஸில் மருத்துவச் செலவு களுக்கு இழப்பீடு பெற முடியும். அதுவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குறைந்தபட்சம் 24 மணி நேரம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சமயத்திலும், அறுவை சிகிச்சை சமயத்திலும் இழப்பீடு கிடைக்கும். இதை தனிநபர், ஒட்டுமொத்தக் குடும்பம், மூத்தக் குடிமக்கள் என அனைவரும் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த பாலிசியையும் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே எடுத்துக் கொள்வது நல்லது.

பெரிய நிறுவனங்களில் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கும். இந்தவகை இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் வரைதான் கவரேஜ் கிடைக்கும். அந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு மாறும்போது அந்த நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் இருந்தால்தான் அதில் நீங்கள் சேரமுடியும்.

உதாரணமாக, நீங்கள் 40 வயதில் வேலை மாறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் இல்லையென்றால், நீங்கள் தனியாகத்தான் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டியிருக்கும். அந்த சமயத்தில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு கவரேஜ் குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்காது. இச்சூழ்நிலையில் இன்ஷூரன்ஸ் எடுத்தும் அது உங்களுக்கு முழுமையாகப் பயன்படாது. எனவே, நிறுவனங்களின் குரூப் இன்ஷூரன்ஸ் இருந்தாலும் நீங்கள் தனியாக சில லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் பாலிசி எடுத்து வைப்பது நல்லது. கூடுதல் கவரேஜ் தேவைப்பட்டால் டாப்அப் செய்துகொள்ளலாம்.

இந்த பாலிசியை எடுத்தால் மட்டும் போதாது. உங்களின் மருத்துவத் தேவை என்ன? நீங்கள் எடுத்து வைத்திருக்கும் பாலிசியின் கவரேஜ் தொகை எவ்வளவு, குரூப் இன்ஷூரன்ஸ் எனில் அதனுடைய கவரேஜ் தொகை எவ்வளவு, எந்தெந்த சிகிச்சைகளுக்கு க்ளைம் கிடைக்கும், கேஷ்லெஸ் வசதி உள்ளதா என்பதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம். எப்போதும் இன்ஷூரன்ஸ் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். மேலும், அந்தத் தகவலை குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிப்பதும் முக்கியம். இப்படி செய்யும்போது எந்த சூழ்நிலையிலும் உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும்.

வீட்டு உரிமையாளர் பாலிசி!
வீட்டு உரிமையாளர் பாலிசி (ஹவுஸ் ஹோல்டர் பாலிசி) என்பது, வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் கட்டடத்திற்கு சேர்த்து கவரேஜ் கிடைக்கும். இதில் தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்கள், ஃபர்னிச்சர் போன்ற அனைத்திற்கும் கவரேஜ் கிடைக்கும். இந்த பாலிசிக்கு, நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுக்கும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப பிரீமியம் இருக்கும்.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். கட்டடத்துக்கு எடுக்க முடியாது. சொந்த வீடு என்கிறபோது, கட்டடத்துக்கு எடுக்கும் கவரேஜுக்கு நில நடுக்கம், நிலச் சரிவு, தீவிரவாதிகள் தாக்குதல், மழை வெள்ளத்தால் பாதிப்பு, திருட்டு போன்ற சமயத்தில் இதில் க்ளைம் பெற முடியும்.

வீட்டு உரிமையாளர் பாலிசியில் கவரேஜ் செய்துள்ள பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். ஏனெனில், ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு க்ளைம் செய்யும்போது அந்தப் பொருளின் உண்மையான மதிப்பைத் தெரிந்துகொள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனம் அந்த ரசீதை கேட்க வாய்ப்பு உள்ளது. அதாவது, அதிக மின் அழுத்தத்தால் உங்களின் டி.வி. பழுதடையும்போது, உங்கள் டி.வி.க்கான மதிப்பைத் தெரிந்துகொள்ள அதை வாங்கிய தற்கான ரசீதைக் கேட்பார்கள். எனவே, க்ளைம் கேட்கும்போதுதான் சிக்கல் வரும்.

வாகன இன்ஷூரன்ஸ்!
இன்று வாகனம் இல்லாத வீடுகளே இல்லை. இந்திய வாகனச் சட்டப்படி, மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் என்கிற தேர்டு பார்டி இன்ஷூன்ஸ் எடுப்பது கட்டாயம். இந்த இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஒட்டக் கூடாது. மேலும், பிரீமியத்தைக் குறைக்க வாகனத்தின் மதிப்பைப் பலரும் குறைத்து இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். இந்நிலையில் க்ளைம்-க்குப் போகும்போது வாகனத்தின் உண்மையான மதிப்பு இழப்பீடு கிடைக்காது. எனவே, பிரீமியத்தில் 100, 200 ரூபாய் மிச்சப்படுத்துவதற்காக பல ஆயிரங்களை இழக்க நேரிடும்.
இந்த இன்ஷூரன்ஸ் அனைத்தும் கட்டாயம் வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாகும். எனவே, இந்த பாலிசிகள் எல்லாம் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்'' என்று முடித்தார்.

No comments: